அண்ணாவுக்குக் கல்யாணம்
முன் யோசனையுடன் முன் ரூம்
அண்ணா அண்ணிக்கும்
எழுதிக் கொடுக்கப் பட்டது...
தம்பிக்குக் கல்யாணம்
சமயோசிதமாய்ப் பின் ரூம்
தம்பிக்கும் மாலினிக்குமாய்
பத்திரப் படுத்தப் பட்டது....
ஒன்றும் சொல்லாமல்
அம்மாவும் அப்பாவும்
ஹாலுக்கு
இடம் பெயர்ந்து
கொண்டார்கள்.........
ஹாலிலிருந்து
பாட்டி வீடு ரெண்டு படும்படிக்
கத்திக் கொண்டே
பூனையை விரட்டி
மாடிப்படிக்கு அடியில்
குடி கொண்டாள்..............
பாட்டியும் அப்பாவும்
அடுத்தடுத்து படத்துக்குள்
நுழைந்து பொட்டும் பூவும்
வைத்துச் சாமியாகிப்
போனார்கள்
அதற்கப்புறமான அதிகாலையில்
யாரும் சொல்லாமலேயே
அம்மா அமைதியாக
மாடிப்படிக்குக் கீழே
முகம் மறைத்துக் கொண்டாள்
எல்லோருக்கும் பொதுவான
வீடு மட்டும் எப்போதும் போல
கலைந்து கொண்டேயிருந்தது........
Sunday, October 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment