Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, October 24, 2010

ஸ்பரிசம்


குட்டிம்மாவின் பிறப்பில்
தேவதை இறக்கைகளுக்கான
தேடல் ஆரம்பம்...

ரோஜா நிறக் குட்டிக் கால்
கண்டதுமே சின்ட்ரெல்லாவின்
தொலைந்த காலணியைத் தேட
ஆரம்பித்தது மனது...

பயத்தில் குட்டிம்மாவின் கை
இறுக்கத்திலும் முதுகுப் பின்
மறைவிலும்
கடவுளானேன் சிலநேரம்...

எனதுடையணிந்து
என் முன் நிற்கும் போது
என் முற்றத்தில்
எனக்கான மழை

கண்ணாடிக் கைவளையோசையும்
சுவரில் நெற்றிப் பொட்டும்
மொட்டு சத்தமில்லாமல் மலர்வதைக்
கொஞ்சம் சத்தமாகவே சொல்லியது...

யாரையோ மணமகனாக்கி
உடன் ஏற்றி
ரயில் நகரும் போது
அவசரமாய்த் தொட்டுக்
கோர்த்துக் கொள்ளும் கைகளின்
ஸ்பரிசம்...

கைகளில் ஒட்டிக் கொண்டு வீடு
வந்து சேர்ந்து அழ வைத்தது...

வீடு முழுவதும் நீ செய்த
ப்ளாஸ்டிக் பூக்களும்
சுவர் கிறுக்கல்களும்
கொடியில் தொங்கும்
சூடிதார்களும்
கண்ணாடியில் ஸ்டிக்கர்
பொட்டுமாய்
கைநிறைய உன் பிரிவு
ஸ்பரிசமுமாய்...
கண் நிறைய ஒளித்து
வைத்த மழையுமாய்
அம்மா...

எப்போதாவாது யாரேனும் உணரலாம்....

எப்போதாவது முற்றத்தில்
வந்து விழும்
தூங்கணாங் குருவிக் கூடு
சொன்ன கதையும்.

தினம் உதிர்ந்து
குப்பைக்குப் போகும்
பூக்களும் இலைகளும்
சொன்ன கதையும்

வேறு வேறாயிருந்தாலும்

தார்ரோட்டில் தெரியாமல்
விழுந்து ஒட்டிக் கொண்ட
காலடித் தடங்கள்
சிக்கி கொண்டு சொன்ன கதையும்

வெட்டப் பட்ட மரம்
மண்ணுக்கடியில்
விட்டுச் சென்ற வேர்கள்
சொன்ன கதையும்

வேறு வேறாயிருந்தாலும்

மரித்துப் போன பட்டாம்பூச்சியை
இடம் பெயர்த்துத் தூக்கிப் போன
எறும்புக் கூட்டம் சொன்ன கதையில்

யாரேனும் உணரக் கூடும்
எல்லாக் கதைகளையும்.....

வீழ்ந்து கிடக்கும் நிழல்கள்!

இரவில்
விளக்கின் காலடியிலும்

பகலில்
சூரியனின் காலடியிலும்

நிழல்கள் எப்போதும் போல
விழுந்து கிடந்தன....

உச்சி வெயிலில்
என் காலடியில்
நசுங்கிக் கிடந்ததுவும்
அதுவேதான்..

வெளிச்சத்தை எதிர்த்துப்
பழக்கமில்லா நிழல்கள்
எப்போதும் வீழ்ந்து
கிடந்தாலும்...

மெழுகுவர்த்தியின்
வெளிச்சத்துக்கு
மட்டும் சுவற்றில்
எழுந்தாடும்
என் நிழல்
என்னிடம் கேட்டது ....

முகமில்லா என்னைப்
பிடித்திருக்கிறதாவென்று?

விட்டுப் போய்விடுமோவென்று
சுவற்றோடு போய் ஒட்டிக் கொண்டேன்....
சட்டெனக் காணாமல் ஓடி மறைந்தது
எப்போதும் வீழ்ந்து கிடக்கும் அது!

கை விரித்துச் சிரித்தது மரம்!!

கீழே விழுந்த பந்து
எம்பி எழுந்து வந்ததைப்
பார்த்து இறகை உதிர்த்து
விட்டுக் காத்திருக்கிறது
ஏமாறப் போகும் பறவை!

தானே கீழே விழுந்த மழை
இனி எப்போ மேலே
போவோமெனச் சூரியனைப்
பார்த்துச் சிரித்துக் கிடந்தது
குளத்தில்....

அடித்து வீசும் காற்றில்
கொஞ்சம் இலைகளையும்
நிறைய மலர்களையும்
உதிர்த்து பதிலுக்கு
எதுவும் வேண்டாமல்
கை விரித்துச் சிரித்தது மரம்!!

ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !
எனச் சொல்லாமல்
சொல்லிப் போயிற்று
கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி!!

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-4

அண்ணாவுக்குக் கல்யாணம்
முன் யோசனையுடன் முன் ரூம்
அண்ணா அண்ணிக்கும்
எழுதிக் கொடுக்கப் பட்டது...

தம்பிக்குக் கல்யாணம்
சமயோசிதமாய்ப் பின் ரூம்
தம்பிக்கும் மாலினிக்குமாய்
பத்திரப் படுத்தப் பட்டது....

ஒன்றும் சொல்லாமல்
அம்மாவும் அப்பாவும்
ஹாலுக்கு
இடம் பெயர்ந்து
கொண்டார்கள்.........

ஹாலிலிருந்து
பாட்டி வீடு ரெண்டு படும்படிக்
கத்திக் கொண்டே
பூனையை விரட்டி
மாடிப்படிக்கு அடியில்
குடி கொண்டாள்..............

பாட்டியும் அப்பாவும்
அடுத்தடுத்து படத்துக்குள்
நுழைந்து பொட்டும் பூவும்
வைத்துச் சாமியாகிப்
போனார்கள்

அதற்கப்புறமான அதிகாலையில்
யாரும் சொல்லாமலேயே
அம்மா அமைதியாக
மாடிப்படிக்குக் கீழே
முகம் மறைத்துக் கொண்டாள்

எல்லோருக்கும் பொதுவான
வீடு மட்டும் எப்போதும் போல
கலைந்து கொண்டேயிருந்தது........

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....

 எதிர்பாரா மழைக்கு
அடுப்படியில் ஒன்றும
முன்னறையில் ஒன்றுமாய்
பாத்திரம் வைத்துப்
பத்திரப் படுத்தியாயிற்று மழையை....

அதிசயிக்கும் மழையைச்
சபித்துக் கொண்டே
பின்கட்டுக்கு ஒரு சாக்கும்
முன் வாசலில் ஒரு சாக்கும்
போட்டு  மழைத் தண்ணியைத்
தடுத்தாயிற்று

இன்னும் மழையிலிருந்து தப்பிக்க
புத்தகப் பைகளும்
துணிமூட்டைகளும்
சோற்றுப் பாத்திரமும்
இடம் மாறிக் கொண்டேயிருந்தன.....

மழை கொஞ்சம் அடித்துப் பெய்ய...
கையில் கிடைத்த அண்டா குண்டா
எடுத்து ஓடி ஓடி இடம் மாற்றி
பூனைக் குட்டிக்கொரு
ஈரமில்லாஇடம் தேடி.....

 ரசிக்க முடியாத
மண்வாசனையுடன்....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....

உடனடித் தேவை....

என்னை இழுத்துச் செல்லும் ஒரு நதியும்
பறவையிறகு போல் மிதக்கச் செய்யும் காற்றும்
நிமிர்ந்து பார்க்க ஒரு வானமும்
உடனடித் தேவை....

நினைத்ததைக் கொடுக்கும் ஜீ பூம்பா பூதங்கள் சிலவும்
சொர்க்கத்துக்கு வழி தெரிந்த தேவதைகளும்
உண்மை பேசிக் கொள்ளும் மனிதர்களும்
உடனடித் தேவை....

கொஞ்சம் என்னைத் தொலைக்கும் வெயிலும்
கொஞ்சம் என்னை மீட்டுத் தரும் மழையும்
நான் தூவும் அரிசி கொத்தக் கொஞ்சம் குருவிகளும்....
பிடித்த கையில் ஒட்டிக் கொள்ளும் வண்ணங்களுக்காக
சில வண்ணத்துப் பூச்சிகளும்.......
உடனடித் தேவை....

Friday, December 25, 2009

மழை பொழிந்தது இங்கே!




நவீன விருட்சம் அது
தலைகீழாய் முளைத்திருந்தது....
பூவும் இலைகளும் வானம் நோக்கி
உதிர்ந்து வீழ்ந்தது..........
பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம் ............
மழை பொழிந்தது இங்கே!

சூரியன் குடிக்கலாம் வாங்க!

கொஞ்சம் சூரியன் குடிக்க
கைகளை நீட்டிக்
கையில் எடுக்கக்
கையிடுக்கில் நிற்காமல்
நழுவி ஓடியது சூரியன்.........

வெயில் மினு மினுக்கும்
ஆற்று நீரைச் சொன்னேன்!

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள் -1

படித்துத் தூக்கியெறியும் பத்திரிக்கையும்..........
ஜோடி பிரிந்திருக்கும் செருப்பும்....
கொடிச் சேலையும்,திரைச்சீலையும்,
ஆங்காங்கே கிடக்கும் தலையணையுமாய்,
திறந்திருக்கும் ஜன்னல் கொண்டு வந்தசருகும் ........
கூடு கட்டப் பறக்கும் குருவி உதிர்த்த
சிறகுமாய் ....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்.................

ஓடி ஓடிப் போட்டுக் கொள்ளும் பவுடரும் லிப்ஸ்டிக்குமாய்...........
இடம் மாறிக் கொள்ளும் இருக்கைகளும்,திரைச்சீலைகளும்.............
இடுக்குகளுக்குள் ஒளிந்து கொள்ளும் பத்திரிக்கைகளும்.....
கொடிகளுக்கு விடுதலையளிக்கும் சேலைகளும்....
அலமாரிகளுக்குள் முடக்கப்படும்
எண்ணெய் சீசாக்களும்,சீப்புக்களும்......
உடைமாற்றிக் கொள்ளும் கட்டில்களும்
தலயணை உறைகளும்....................
உதறி விரிக்கப்படும் மிதியடிகளும்,
ஜோடி சேர்க்கப் படும் செருப்புகளும்
நேர்ப்படுத்திக் கொண்டேயிருக்கும் வீடுகள்.............

கலைவதும் நேர்ப்படுத்துவதுமான தினசரி
இயக்கங்களைச் சுமந்தபடி
அசையாமல் நின்றது வீடு.................
ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது!

என்றேனும் பசுமையாய் இருந்திருப்பேன்...

என் கிளைகளில்
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....

இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....

இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............

என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்.......

Sunday, September 20, 2009

காதலினால் தோற்கப் போகும் காதல்...........

காதலினால் தோற்கப் போகும் காதல்...........



அளவற்ற அமிர்தமும் விஷமாகும் போது
அளவற்ற நேசமும் தானே விஷமாகும்
எதிர்பார்ப்புகளின்றி இருக்கமுடியாமல்
மனம் காதலிடம் தோற்றுப் போய்
அனிச்சையாய் கொஞ்சம் விலகிப்
போய் நின்று கொண்டது......

நிசப்தம் அலறுகிறது காதுக்குள்
சப்தம் மௌனமாக இருக்கிறது
வானம் புள்ளியாய்த் தன்னைச்
சுருக்கிக் கொண்டது.........

மழை அழ மறந்து
சிரித்துக் கொண்டிருந்தது....
காற்று பறக்க மறந்து
நடந்து சென்றது....

நிபந்தனையற்ற அன்புக்குக்
கனவை மட்டுமல்ல
காதலையும் கூடக்
காணிக்கையாக்கி
விடவேண்டியதுதான்

இவ்வாறு நினைத்த மாத்திரத்தில்
உருவாகிய சுனாமி
அழித்துப் போன உலக
வரை படத்தில் மனமும்
இணைந்து கொண்டது.....

இதயத்தின் மூலை முடுக்கெல்லாம்
மனதைத் தேடிப் பார்த்துச் சலித்து
இல்லாத மனம் ஏற்படுத்திய
வெற்றிடம் ரணகளமாகியது........

வெற்றிடங்கள் நிரப்பும்
வித்தையை அறிந்தால்
தெரிந்தால் சொல்லிப் போங்கள்
என வருவோர் போவோரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்......

தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................

Saturday, September 19, 2009

இதுவும் கடந்து போகும்......

இதுவும் கடந்து போகும்......

" நான்" எனும் பாதரசம் பூசிய
மாயக் கண்ணாடி மனம்.....

முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்
உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்?

மாயக் கண்ணாடி
அந்தப் பாதரசம் இழக்கத் தயாராயில்லை
உலகம் காட்டவும் தயாராயில்லை

தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

தப்பியோட முடியாத பிம்பங்கள்
விட்டு விலகாத "நான்" பிம்பங்கள்
சுகமாய்த்தான் இருந்தது
அந்த அடைமழையில்
நனையும் வரை

அந்த அன்பெனும் அடைமழையில்
நனைந்தது மாயக் கண்ணாடி
உதிர்ந்து கரைந்தது பாதரசம்
"நான்" இழந்தது மாயக் கண்ணாடி

ஹா..............
அழகிய உலகம் தெரிந்தது முன்னாடி...!!!!

உதிர்ந்த ஒற்றைச் சிறகு..........

உதிர்ந்த ஒற்றைச் சிறகு..........


மனதின் பட்டாம்
பூச்சியின் சிறகுகள்
இன்று ஏனோ
திறந்தே இருக்கின்றன...

நிதம் பல
யுத்தங்கள் செய்யும்
அவை இனறு ஏன்
மௌனங்களை
அறிமுகப் படுத்துகின்றன..

என் வானம்
முழுவதுமாய் உடைந்து
போன நிலவுத் துண்டுகள்
சிதறிக் கிடக்கிறது..........

பறக்கப் பார்க்கும்
உதிர்ந்த சிறகின் மேல்
கல் வைத்துப்
பாதுகாக்கும் உத்தி
எனக்கு உகந்ததல்ல......

நான் நானாக
இருக்கப் பார்க்கிறேன்.....
வித்தை வசமாகவில்லை
என்பதுதான் வருத்தம்......

Saturday, September 5, 2009

மழைக்கு என்னைப் பிடிக்கும்.......

மழைக்கு என்னைப் பிடிக்கும்.......

இந்தக் கவிதை YOUTHFUL VIKADANIL.....!!!!!
ரயில் பயணங்களில்....

ஜன்னலில் கூடவே
ஓடி வரும்
நிலவு

கூந்தல் கலைத்து
வருடி வரும்
காற்று

கன்னம் சிலிர்க்க
சிரித்துத் தெளிக்கும்
சாரல் மழை

கையசைத்து விடை கொடுத்து
வழியனுப்பாமல் கூடவே
வந்ததால்

எனக்குப் புரிந்தது
நிலவுக்கு
காற்றுக்கு
மழைக்கும்
என்னைப் பிடிக்கும் என்று!!!!

இயல்புக்கு மாறாக ........

இயல்புக்கு மாறாக ........

அதிகாலை பெய்த
அந்தப் பெருமழையில்
உதிர்ந்து கிடந்த
இலையும் பூக்களும் திடீரென்று
நீந்தக் கற்றுக் கொண்டன

அடை மழையின் பெருந்துளிகளால்
உறங்கிக் கிடந்த
நீர்க் குமிழிகள் சட்டென்று
விழித்துக் கொண்டன

துரத்திப் பிடித்து நெடுநாளாய்
அடைத்து வைத்த வண்ணத்துப் பூச்சி
விடுவித்த அன்று
பறக்க மறந்து போயிருந்தது.....

இயல்புக்கு மாறாக ..............
அடித்துப் பெய்யும் மழையில்
குடை வைத்துக் கொண்டு
நனைந்து போகும் என்னைப்
பரிதாபமாகப் பார்த்தார்கள்
அவர்கள்!!